வியாழன், 31 மார்ச், 2016

புதுச்சேரியின் ஊசுட்டேரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்


புதுச்சேரியின் வேடந்தாங்கல் என்றழைக்கப்படும் ஊசுட்டேரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. விதவிதமான பறவைகளைக் காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஊசுட்டேரி. இந்த ஏரியின் அமைதியான சூழ்நிலையால் ஈர்க்கப்பட்டு ஆண்டுதோறும் 110 வகையான உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது ஊசுட்டேரில் சீசன் துவங்கியுள்ளதையொட்டி ஆயிரக்கணக்கான பறவைகள் குவியத் துவங்கியுள்ளன. ஏரியில் எங்கு திரும்பினாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறவைகளாக காட்சியளிக்கின்றன.

குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வட ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து விருந்தாளியாக புதுச்சேரிக்கு வந்துள்ள கரண்டிவாயன், ஸ்பாட் பில்டு பெலிக்கான் என்ற புள்ளிமூக்கு கூழைக்கடா பறவைகள் ஆழம் குறைந்த ஊசுட்டேரி நீர் நிலைகளில் உள்ள மரங்களில் கூடுகளை கட்டி வாழ்கின்றன.

பறவைகளைப் புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலையில் ஊசுட்டேரியில் பலர் குவிகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் ஊசுட்டேரி படகு குழாமில் படகுகளை எடுத்துக்கொண்டு ஏரிக்குள் சிறிது தூரம் சென்று பறவைகளைக் கண்டு மகிழ்வது மட்டுமின்றி அவை எழுப்பும் இனிமையான ஒலிகளையும் கேட்டு ரசிக்கின்றனர்.