திங்கள், 24 அக்டோபர், 2016

பெர்முடா முக்கோணம்.. ஆபத்தான பயணவழி பற்றிய மர்மம் விலகியது..!

விமானங்கள், கப்பல்களை விழுங்கிய வட அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த நிலையில் தற்போது அந்த புதிர் விலகியுள்ளது.
வட அட்லாண்டிக் கடல் பகுதியின் பெர்முடா, மியாமி மற்றும் போர்டோ ரிகா தீவு பகுதிகளின் முக்கோண வடிவிலான இணைப்பே பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. 5,00,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த முக்கோண பகுதி ராட்சச பகுதி என்றே கூறலாம்.
இந்த கடல் பகுதி வழியே கடந்து செல்லும் விமானங்களும், கப்பல்களும் நீரினுள் கவர்ந்து உள்ளிழுக்கப்படுவதாக இதுவரை கருதப்பட்டு வந்தது. இதுபற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் கடலின் அடியில் இருக்கும் உயிரோட்டமான எரிமலைதான் இந்த விபத்துகளுக்கு காரணம் என கண்டறியப்பட்டது. இருப்பினும், எரிமலைகள் ஆகாயத்தில் பயணிக்கும் விமானங்களை எவ்வாறு உள்ளிழுக்கும் என்று பல சந்தேகங்கள் எழுந்தது.
இதன்பின், பல ஆய்வாளர்கள் இந்த மர்ம முக்கோணத்தை பற்றி ஆய்வை மேற்கொண்டனர். அமெரிக்காவின், கொலராடோ பல்கலைக்கழக வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லர் நடத்திய ஆய்வில், பெர்முடா முக்கோண பகுதிக்கு மேல் உள்ள மேகங்கள், நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் தான் இவ்வாறு நடப்பதாக தெரிவித்தார்.
இதனை தெளிவுபடுத்தும் வகையில், ரேடார் செயற்கைக் கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்தார். அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது. பெர்முடா முக்கோணப் பகுதிக்கு மேலிருக்கும் மேகக்கூட்டங்கள் அறுகோண வடிவில் வினோதமாகக் காணப்படுவதாகவும், இவை 32 முதல் 80 கிலோமீட்டர் வரை பரந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
பெர்முடா கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் எழும்புவதால், 45 அடி உயரத்திற்கு சக்தி வாய்ந்த அலைகள் உருவாகி, விமானங்களை நிலைகுலைய வைத்து கடலில் விழச்செய்வது உறுதிபடுத்தபட்டுள்ளது.
இதுகுறித்து, வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனி மேற்கொண்ட ஆய்வில், காற்று கடற்பரப்பின் மீது வேகமாக மோதும்போது சுமார் 45 அடி உயரத்திற்கு அலை எழும்புவதால் அவ்வழியாக செல்லும் கப்பல்கள் உள்ளிழுக்கபடுவதாக கண்டுபிடித்துள்ளனர்.