செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

இந்தியா கூட்டணியின் இலச்சினை ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியீடு..!

 

இந்தியா கூட்டணியின் இலச்சினை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானோ படோல் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  இரண்டாவது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரூவில் நடைபெற்றது.மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு இக்கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் நானோ படோல், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முழு வீச்சில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டம் உலகத்திற்கு மிகப்பெரிய செய்தியை அறிவிக்கும். இந்தியா கூட்டணியின் இலச்சினை குறித்த அறிவிப்பும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


credit  https://news7tamil.live/the-logo-of-the-india-alliance-will-be-released-on-august-31.html