செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

சாதிய கொடுமைகள் தான் மதமாற்றத்திற்கு காரணம்“

 

”சாதிய கொடுமைகள்தான் மதமாற்றத்திற்கு காரணம் “ என நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்
மற்றும் அவரது சகோதரி ஆதிக்க சாதி மாணவர்களால் கொடூரமாக வீடு புகுந்து வெட்டப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் சாதியக் கொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் எம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின்  மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட 500க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது..

“ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஒருவரை தாக்கி விட்டு எந்த சிராய்ப்பும்
காயமும் இன்றி தப்பித்துச் செல்ல முடியும் நிகழ்வு 21 ஆம் நூற்றாண்டிலும்
நடைபெறுகிறது. மனிதநேயம் உள்ள எவராலும் இந்த சம்பவத்தை தாங்கிக்கொள்ள முடியாது.  சட்டமும் அவர்களை எதுவும் செய்யாது என்ற துணிச்சல் காவல்துறை அவர்களை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இயக்குநர் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் எடுக்கும் படங்கள்தான் சாதிய வன்முறைக்கு காரணம்  என்று கூறும் நபர்கள் அதனை கண்டறிந்து தெரிவித்தால் அவர்களுக்கு நோபல்  பரிசு வழங்கப்படும். இந்தியாவில் சாதிய கோட்பாடு தான் மத மாற்றங்கள் நடைபெறக் காரணம்.

15 சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள். சாதிய கொடுமைகள் தான் மதமாற்றத்திற்கு காரணம்.  சாதிய ஒழிப்பு என்பது மூளையை சுத்தம் செய்வது என்று பொருள். மூளையையும் சாதிய அழுக்கையும் சுத்தம் செய்யும் சோப்பு அம்பேத்கரியம்.  சனாதன தர்மம் மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தி சாதி வாரியாக பிரிப்பது.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் விற்பனை அதிகரித்து இருப்பது காவல்துறைக்கு தெரியவில்லையா..? அவற்றை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.  கொலை செய்பவர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிய கொடுமைகளை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் “

இவ்வாறு திருமாவளவன் எம்பி பேசினார்.


source https://news7tamil.live/caste-atrocities-are-the-cause-of-conversion-thirumavalavan-mp-speech-at-the-protest-held-to-condemn-the-nanguneri-incident.html