செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…. படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை சேர்ந்த பாஸ்கர், செந்தில் அரசன் என்பவருக்கு சொந்தமான விசை படகு, பைபர் படகில் மீன்பிடிக்க நேற்று மதியம் சென்றனர். பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் அருள்ராஜ், செல்வமணி, தினேஷ் ஆகிய 4 மீனவர்களும் , செந்தில்அரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வினோத், மருது ஆகிய மூன்று மீனவர்களும் ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 3 பைபர் படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, கம்பி மற்றும் கட்டைகளுடன் மீனவர்களின் படகில் ஏறி 800 கிலோ மீன்பிடிவலை, 2 செல்போன், திசை காட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட ஜந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இதில் பாஸ்கர் என்பவரை தலையில் கம்பியால் தாக்கியதில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருள்ராஜை கத்தியால் வெட்டியதில் கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் அவசரம் அவசரமாக ஆற்காட்டுத்துறை கடற்கரைக்கு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கருக்கு 21 தையல் போடப்பட்டுள்ளது.

அருள்ராஜ், பாஸ்கர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய மூன்று பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://news7tamil.live/sri-lankan-pirates-attack-on-tamil-nadu-fishermen-5-seriously-injured-admitted-to-hospital.html