வியாழன், 7 செப்டம்பர், 2023

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டம் – ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு..!

 

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் ,சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாகவும், முறையாகவும் வழங்க வலியுறுத்தி மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை சென்னை கிண்டி ரயில்நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநகராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அதேபோல் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கட்டபொம்மன் சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை சென்ற ஊர்வலம் சென்றனர்.

பின் ரயில் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதானி – அம்பானிக்கு கோடிக் கணக்கில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்மொழிந்தனர்.

இதனைதொடர்ந்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற விரைவு ரயிலை மறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது . இதனை தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே கும்பகோணம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் கும்பகோணம் ரயில் நிலையம் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. இதேபோல் கும்பகோணம், தருமபுரி, திருநெல்வேலி, புதுச்சேரி, தூத்துக்குடி போன்ற பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.


source https://news7tamil.live/marxist-communist-party-rail-picket-protest-many-volunteers-participate.html