ஒப்பந்தம் முறிந்ததா? லெபனான் தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான் - உலக நாடுகள் அதிர்ச்சி
09 04 2026
/indian-express-tamil/media/media_files/2026/03/15/strait-of-hormuz-oil-blockade-2026-03-15-12-31-54.jpg)
Donald Trump Iran ceasefire | Strait of Hormuz closed | Lebanon airstrikes today
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக்கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக நாடுகளின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தை மீறியதா இஸ்ரேல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவுக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்களை நடத்தியது.
லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தகவல்படி, புதன்கிழமை அன்று மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் பெய்ரூட்டின் பல பகுதிகள் புகைய மண்டலமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்தே, "இஸ்ரேல் போர் நிறுத்த விதிகளை மீறிவிட்டது" என்று குற்றம் சாட்டிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக அறிவித்தது.
குழப்பத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தில் லெபனான் நாடு மற்றும் அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பெரும் கருத்து முரண்பாடு நிலவுகிறது:
அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், "ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு பயங்கரவாதக் குழு என்பதால் லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இஸ்ரேல் அங்கே நடத்துவது ஒரு தனிப்பட்ட சிறு போர் (Separate skirmish)" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர், "ஈரானுடனான ஒப்பந்தம் ஹிஸ்புல்லாவுக்குப் பொருந்தாது; அவர்களை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடுவோம்" எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதனை வன்மையாக மறுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பதிவைச் சுட்டிக்காட்டிய அவர், லெபனானும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் என்று வாதிடுகிறார். "அமெரிக்கா ஒன்று அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் வழியாகப் போரைத் தொடர வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது" என்று அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ஒரு பேரல் எண்ணெய்க்கு 1 டாலர் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது எரிபொருள் விலையை உலகளவில் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை மறுப்பதால் தற்போது இந்த ஒப்பந்தம் முறியும் நிலையில் உள்ளது. "உலக நாடுகள் லெபனானில் நடக்கும் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா தனது வாக்குறுதியைக் காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/international/donald-trump-iran-ceasefire-strait-of-hormuz-closed-lebanon-airstrikes-today-11703719





