ஞாயிறு, 1 மே, 2016

சுட்டெரித்துப் போகிறது “எல் நீனோ’ – மூழ்கடிக்க வருகிறது “லா நீனா’!


download (13)
ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் “லா நீனா’ சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியத்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது.
 இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சீனாவில் உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும் மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்து போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும், உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.
 இந்த நிலையில், வெப்ப சலனத்தின் இந்த ஆண்டு மத்தியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள், அதனைப் பின்தொடர்ந்து “லா நீனா’ என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். அந்த “லா நீனா’ காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி, மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 இதுகுறித்து மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நா. துணைப் பொதுச் செயலர் ஸ்டீஃபன் ஓபிரையன் கூறியதாவது: 
 வெப்ப சலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் “லா நீனா’, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். வெப்ப சலனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும். 
 வெப்ப சலனம் காரணமாக ஏற்கெனவே உலகம் முழுவதும் 6 கோடி பேர், அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளனர். 
 இந்த நிலையில், “லா நீனா’வால் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம் என்றார் அவர்.