
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் உத்தரபிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தை சேர்ந்த கரேலா என்ற கிராமத்தில் கடந்த 70 வருடங்களாக கிராம மக்கள் மின்சார வசதி பெறாமல் இரவு நேரங்களில் இருளில் தவித்து வருகின்றனர். இதனால் தங்கள் குழந்தைகள் பள்ளி படிப்பை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தங்கள் கிராமத்தில் மின்சார வசதி அளிப்பதற்காக மின் கம்பங்கள் நடப்பட்டதாகவும் அதன் பிறகு மின் இணைப்புக் கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இணைய வசதி அளிக்கப்படும் என்று அரசு உறுதியளித்து வரும் நிலையில் 70 ஆண்டுகளாக ஒரு கிராமம் மின்சார வசதியின்றி தவித்து வருகிறது.