வியாழன், 19 ஏப்ரல், 2018

சென்னையில் பாரம்பரியமான ஏழு முக்கிய இடங்கள்! April 18, 2018

Image

உலக பாரம்பரிய தினமாக, ஏப்ரல் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து கலாச்சார பாரம்பரியங்களையும், நினைவுச்சின்னங்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. 

நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச கவுன்சில் (The International Council on Monuments and Sites), 1982ம் ஆண்டு, ஏப்ரல் 18ஐ உலக பாரம்பரிய தினமாக அறிவித்தது. இதனை, யுனெஸ்கோ, 1983ம் ஆண்டு அங்கீகரித்தது. யுனெஸ்கோ அறிவித்த உலக பாரம்பரிய தளங்களில் இந்தியாவில் மட்டும் 36 தளங்கள் இருக்கின்றன. 
அதனடிப்படையில், சென்னையில் நாம் அன்றாடம் கடந்து செல்லக்கூடிய பாரம்பரியமான இடங்களில் ஏழு முக்கியமான இடங்களின் பட்டியல் உங்களுக்காக... 

1. புனித ஜார்ஜ் கோட்டை:

இந்தியாவில், பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக, புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியில் 1963ம் ஆண்டு, இந்த கோட்டையின் கட்டுமான பணி தொடங்கியது. புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23ம் தேதி கட்டிமுடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. சென்னைக்கு சுற்றுலா வரும் அனைவரும் பார்க்க விருப்பப்படும் இடங்களுள் ஒன்றாக புனித ஜார்ஜ் கோட்டை இருக்கிறது.

2. ரிப்பன் கட்டிடம்:

சென்னையில் இருக்கும் பழமையான கட்டிடங்களுள் ஒன்றாக ரிப்பன் கட்டிடம் இருக்கிறது. லோகநாத முதலியார் என்பவரால், அக்காலத்திலேயே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், 1909ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 1913ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த ரிப்பன் பிரபுவின் பெயர் இக்கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது. 

3. மெட்ராஸ் போர் கல்லறை:

இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவாக 1952ம் ஆண்டு, 2.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது மெட்ராஸ் போர் கல்லறை. இது, சென்னை நந்தனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லறையில், இறந்தவர்களின் உடல் எதுவும் புதைக்கப்படாமல், அவர்களுடை பெயர் அச்சடிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. 

4. சென்னை சாந்தோம் தேவாலயம்:

சென்னையில் மிக முக்கியமான தேவாலயமாக கருதப்படும் சாந்தோம் தேவாலயம், 16ம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. பின்னர், 1893ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் விரிவாக்கப்பட்டது. சாந்தோம் என்ற சொல்லிற்கு ‘புனித தோமா’ என்று பொருள்.

5. சென்னை உயர் நீதிமன்றம்:

உலகின், இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் கருதப்படுகிறது. இக்கட்டிடம், விக்டோரியா பேரரசியின் ஆட்சியில் நிறுவப்பட்டது. மேலும், 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892ல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது. 

6. சென்னை அரசு அருங்காட்சியகம்:

சென்னை எழும்பூர் பகுதியில், சென்னை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 16.25 ஏக்கர் பரப்பளவில், 1851ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. தொல்லியல், நாணயவியல், சிற்பம் முதலியவைகள் உள்ளடங்கிய 46 காட்சிக்கூடங்கள், சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. கோடை விடுமுறையின்போது குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய இடமாக சென்னை அருங்காட்சியகம் இருக்கிறது.

7. நேப்பியர் பாலம்:

புனித ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைப்பதாக நேப்பியர் பாலம் அமைந்திருக்கிறது. சென்னை மாநகரின் மிக பழமையான பாலங்களுள் ஒன்றான நேப்பியர் பாலம், 1869ம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்ற ஆளுநரால் கட்டப்பட்டது. 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் மிக பிரம்மாண்டக கட்டப்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலானோர் கடந்து செல்லும் பாலமாகவும், நிறைய தமிழ் படக்காட்சிகளில் வந்து செல்லும் பாலமாகவும் இப்பாலம் இருக்கிறது. 

நம் பாரம்பரியத்தை காக்கும் சின்னமாக இருக்கும் இதுபோன்ற கட்டிடங்களை காப்பது, மக்களாகிய நமது கடமையாகும். அவற்றை மிகவும் தூய்மையாகவும், சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும்.