செவ்வாய், 17 ஏப்ரல், 2018

நாட்டிலேயே அதிகம் சம்பளம் கிடைக்கும் நகரம் எது? April 17, 2018

Image

நாட்டிலேயே அதிகம் சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது.

Randstad India நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவான Randstad Insights, வேலைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி நாட்டிலேயே அதிகம் சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை பெங்களூரு பிடித்துள்ளது.

அதிகமான ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ள பெங்களூருவில் சராசரியாக நபர் ஒருவர் 10.8 லட்சம் ரூபாயை (CTC) வருமானமாக பெறுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவையடுத்து 10.3 லட்ச ரூபாய் வருமானம் தரும் புனே நகர் 2ஆம் இடத்திலும், NCR (தேசிய தலைநகர் வலயம்) 9.9 லட்ச ரூபாய் சராசரி வருமானத்துடன் 3ஆம் இடத்திலும், 9.2 லட்ச ரூபாய் வருமானம் தரும் மும்பை 4ஆம் இடத்திலும் உள்ளது.

சென்னை:

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இப்பட்டியலில் 5ஆம் இடம் கிடைத்துள்ளது. இங்கு நபர் ஒருவருக்கு சராசரி வருமானம் 8 லட்ச ரூபாய் ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

6வது இடத்தில் ஹைதராபாத் (ரூ.7.9 லட்சம்), 7 வது இடத்தில் கொல்கத்தா (ரூ.7.2 லட்சம்) நகரங்கள் உள்ளன.

Randstad Insights ஆய்வறிக்கையில் மேலும் சில சுவாரஸ்யத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி மருந்து மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான நிறுவனங்கள் இந்தியாவிலேயே அதிகம் வருமானம் தரும் துறையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சராசரி வருமானம் 9.6 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகம் வருமானம் தரும் துறைகளில் 2வது இடத்தை தொழில்முறை சேவைகள் துறை பெற்றுள்ளது. இதில் சராசரி வருமானம் 9.4 லட்சம் ரூபாய் ஆகும்.

உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த துறை 9.2 லட்சம் ரூபாய் சராசரி வருமானத்துடன் 3வது இடத்திலும், 9.1 லட்ச ரூபாய் வருமானத்தை தரும் ஐடி மற்றும் கட்டுமானத்துறை இரண்டும் சரிசமமாக 4வது இடத்தை பகிர்ந்துள்ளன.