திங்கள், 16 ஏப்ரல், 2018

​வண்டலூர் பூங்காவில் இரவு தங்கும் வசதிகள் அறிமுகம்! April 16, 2018

சென்னை, வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பூங்காவிலுள்ள விலங்குகளை இணையதளத்தின் வழி பார்வையிடும் லைவ் ஸ்ட்ரீம் வசதி மற்றும் இரவு தங்கும் வசதிகள் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. 

சென்னையிலுள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது அறிஞர் அண்ணா வண்டலூர் வன உயிரியல் பூங்கா. இங்கு பல்வேறு விலங்குகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் இயற்கை பாதுகாப்போடு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்கா பார்வை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே. வாரந்தோறும் செவ்வாய் கிழமை விடுமுறை.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகைபுரிந்து வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கான கோடைவிடுமுறைகள் வேறு துவங்கி விட்டதால் வண்டலூரில் பார்வையாளர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கும். ஏற்கனவே இங்கு பார்வையாளர்களுக்கென பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூர் பூங்கா மிகவும் பெரியது என்பதால், நடந்து சென்று உயினங்களை பார்வையிடுவது அலுப்பை ஏற்படுத்தும். சிறுவர்கள் இளைஞர்கள் மட்டுமே பெரும்பாலும் நடந்து செல்வார்கள். மற்றவர்கள் கட்டண மிதிவண்டியை உபயோகித்துக் கொள்ளலாம் அல்லது பார்வையார்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பூங்கா வண்டியில் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். 

மேலும் ஆங்காங்கே பார்வையாளர்களின் களைப்பை போக்கும் வகையில் பூங்காவின் பாதையோரங்களில் குடிநீர் தொட்டிகளும், கல் மற்றும் மர மேசைகளும் அமைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி உணவகங்களும் உள்ளேயே அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் வனவிலங்குகளை பார்வையிடுதல் மற்றும் இரவு தங்கும் வசதி ஆகிய இருவசதிகள் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு அன்றிலிருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. 

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வசதி மூலம் வனவிலங்குகளை அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா இணையதளத்தின் வாயிலாக இந்த லிங்கில் (https://www.aazp.in/live-streaming/) லைவாக பார்க்கலாம். இப்போதைக்கு சிங்கம், காட்டெருமை, சிம்பான்சி மற்றும் சிங்கவால் குரங்குகளை மட்டும் பார்க்கும் விதத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் யானை, வெள்ளை புலி, வங்க புலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உட்பட 16 விலங்குகளை பார்வையிட முடியும் என அண்ணா உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி தொலைவிலிருந்து வரும் பார்வையாளர்கள் பூங்காவிலேயே இரவு தங்கி காலையில் பூங்காவினை பார்வையிடும் விதமாக தங்கும் அறைகள் மற்றும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.அதற்கான விவரங்கள் இதோ
தங்கும் நேரம் : மாலை 6 மணிமுதல் அடுத்த நாள்  மதியம் ஒருமணி வரை 
இருவர் தங்கும் ஏசி அறையுடன் பூங்கா சுற்றுப்பயணத்திற்கும் சேர்த்து இருவருக்கு 2000ரூபாய் மற்றும் வரிப்பணம் செலுத்த வேண்டும். 
அதேபோல் ஒருவர் மட்டும் தங்கும் ஏசி அறையுடன் பூங்கா சுற்றுப்பயணத்திற்கும் சேர்த்து ஒருவருக்கு 1500 ரூபாய் மற்றும் வரிப்பணம் செலுத்த வேண்டும்.
12 வயத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் மட்டுமே.
இந்த கட்டணங்களில் தங்கும் வசதி, பூங்காவை பார்வையிடுவதற்கான வசதி மற்றும் சஃபாரி வசதி ஆகியவை அடக்கம். அதற்கென தனியாக கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலும் இரவு தங்கும் பார்வையாளர்களுக்கென  பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை (https://www.aazp.in/room-search/) இந்த லிங்கில் பார்தது தெரிந்து கொள்ளலாம்.