வியாழன், 4 பிப்ரவரி, 2021

69% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

 Supreme Court to examine plea against T.N.’s 69% quota :  கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு வேலைகளில் 69% இட ஒதுக்கீட்டினை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை அமல்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை ஒப்புக் கொண்டது.

அசோக் பூஷன் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு நாட்களுக்குள் தமிழக அரசு தன்னுடைய விளக்கத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சி.வி. காயத்ரி தன்னுடைய அப்பா வைத்தீஸ்வரன் உதவியுடன், தமிழக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி சட்டம் 1993க்கு (கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் வேலைகளில் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் சட்டம்) எதிராக விரிட் மனு கொடுத்துள்ளார்.

இந்த சட்டம் அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் நீதித்துறையின் மறு ஆய்வில் இருந்து பாதுகாக்கப்படும் ஒன்றாகும்.

இந்த சட்டத்தின் நான்காவது பிரிவு பிற்படுத்தப்பட்டோருக்கு 30% இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், (குற்றப்பரம்பரையில் இருந்து நீக்கப்பட்ட) சீர்மரபினருக்கு 20% இட ஒதுக்கீடும், 18% பட்டியல் சாதியினருக்கும், 1% பட்டியல் பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டம் 1993, கல்வி நிறுவன சேர்க்கைகள் மற்றும் அரசு வேலைகளில் 69% இடஒதுக்கீட்டினை வழங்குகிறது. ஆனால் இது தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் அளவுக்கு அதிகமானது. இந்த அளவுக்கு அதிகமான இட ஒதுக்கீட்டினால் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர் என்று காயத்ரியின் சார்பில் அவருடைய வழக்கறிஞர் சிவ பால முருகன் கூறினார்.

50% இட ஒதுக்கீடு என்பது தான் சட்டம். மிகவும் அரிதான சமயங்களில் வெகு தூரங்களில் இருக்கும் மக்களை பொதுஜன வாழ்க்கைக்கு கொண்டு வரும் போது இந்த சட்டத்தில் தளர்வுகள் கொண்டு வரலாம் என்று இந்திரா சாவ்னே வழக்கில் கூறப்பட்டிருந்தது. “அவ்வாறு செய்யும்போது, ​​அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மேலும் ஒரு சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டம், 1993, இந்திர சாவ்னே வழக்கில் குறிப்பிடப்பட்ட சோதனையில் தேர்ச்சி பெறவில்லை, எனவே அரசியலமைப்பிற்கு முரணானது இது என்று அறிவிக்க வேண்டும், ”என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  ஒன்பதாவது அட்டவணையில் உள்ள ஒவ்வொரு சட்டமும் அடிப்படைக் கட்டமைப்பின் கோட்பாட்டை அழிக்கிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-to-examine-plea-against-tns-69-quota-245554/