சனி, 6 பிப்ரவரி, 2021

ஜூன் மாத‌த்திற்கு பிறகே நேரடி வகுப்புகள் : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இந்த உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரிகளும் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இதில் முதல் ஓரிரு மாதங்கள் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதனால் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் முயற்சியாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் மாணவர்கள் கணிணி, ஸ்மார்ட்போன் வாயிலாக வீட்டில் இருந்த படியே படிக்க வசதி செய்யப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மேலும் பயனடையும் விதமாக தமிழக அரசு கல்வித்தொலைக்காட்சி தொடங்கி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை நிலையில், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது ஊரடங்கில் பலகட்ட தளர்வுக்கள் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், கல்லூரிகள் திறப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அனைத்து கல்லூரி மாணவர்களும் கல்லூரிக்கு செல்லும் நிலையில், பழம்பெரும் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும், ஜூன் மாத‌த்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவித்துள்ளது. இதனால் கல்லூரி திறக்கப்பட்டாலும், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/education-jobs/madras-university-official-announce-for-continue-online-classes/