சனி, 13 பிப்ரவரி, 2021

தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை அரசு சமரசம் செய்து கொள்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

 லடாக்கில் அமைந்துள்ள பாங்கோங் த்ஸோ பகுதியில் இந்தியா சீனாவுடன் ஒப்பந்தம் செய்ய இருப்பது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறினார். அதனை தொடர்ந்து வியாழக்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு வெட்கம் ஏதுமின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியது.

பாங்கோங் த்ஸோவில் இந்தியா ஃபிங்கர் 4 வரை ஆக்கிரமித்துள்ளது. வடக்கு கரையில் ஃபிங்கர் 8 வரை ரோந்து பணியை மேற்கொண்டு வந்தது. லைன் ஆஃப் கண்ட்ரோல் ஃபிங்கர் 8 வரை உள்ளது என்று இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும், சந்தேகமின்றியும் இருந்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி இந்திய துருப்புகள் ஃபிங்கர் 3க்கு திரும்பிவிட்டது. எல்.ஏ.சியை மறுவடிவமைப்பு செய்வது இந்தியாவிற்கு தீமைக்கு வழிவகுப்பது அல்லவா. மேலும் ஃபிங்கர் 3 முதல் 8 வரையில் பஃப்பர் மண்டலத்தை உருவாக்குவதற்கு இது சமம் அல்லவா? இப்போது எல்.ஏ.சி. நம்முடைய பக்கத்தில் இருக்கிறதா? இது இந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான சமரசம் அல்லவா? என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா கூறினார்.

பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தான் இந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பில் வெட்கக் கேடான மற்றும் மன்னிக்க முடியாத சமரசத்திற்கு பொறுப்பேற்கவும் பதில் கூறவும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாங்கோங் த்சோ ஏரி ஏரியாவின் தெற்கு கரையில் உள்ள கைலாஷ் மலைத்தொடர்களில் இந்தியப் படைகள் ஆக்கிரமித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், “இன்று பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, கைலாஷ் மலைத்தொடர்களில் இந்த பகுதிகளில் அமைந்துள்ள நமது ஆயுதப் படைகள் விலகும் என்பதையும் குறிக்கும்” என்று அவர் கூறீனார்.

சீன ராணுவ வீரர்களுக்கு பாதகமாக இருக்கும் கைலாஷ் மலைத்தொடர்களில் இருந்து இந்திய துருப்புகள் பின்வாங்குவதற்கு ஏன் ஒப்புக் கொண்டது என்று பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் விளக்கம் அளிப்பார்களா? இது தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யும் முடிவில்லையா என்றும் அவர் கேட்டார்.

டெப்சாங் சமவெளி, கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் த்சோ ஏரி பகுதி மற்றும் தெற்கு லடாக்கில் உள்ள சுமூர் ஆகிய இடங்களில் இருந்து இந்தியப் பிரதேசத்திலிருந்து முழு சீனர்களும் விலகுவது குறித்து உத்தரவாதம், காலக்கெடு ஏதும் வழங்காமல் பாதுகாப்பு அமைச்சர் தவறான தகவலை வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் மாறாக, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டின் சில பகுதியை விட்டுக் கொடுக்க முயல்கிறது. பல வருடங்களாக பாங்கோங் த்ஸோ ஏரியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்திருந்தது இந்தியா . மேலும் ஃபிங்கர் 8 வரை ரோந்து சென்றன என்று அவர் கூறினார்.

முக்கியமான டெப்சாங் சமவெளிகளைப் பற்றி அரசாங்கம் மௌனமாக உள்ளது, அங்கு சீனா எல்.ஐ.சி-க்குள் 18 கிலோமீட்டர் தூரத்தில் Y ஜங்ஷன் வரை சீனா ஊடுருவி உள்ளது. சீனர்களை அவர்களின் எல்லைக்கு அனுப்புவது குறித்தும், ஒய் ஜங்க்‌ஷனில் அமைந்திருக்கும் சீனர்களை அகற்றுவது குறித்தும் ஏன் அரசு பேசவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

source https://tamil.indianexpress.com/india/congress-says-govt-compromising-national-security-territorial-integrity-247043/