வியாழன், 11 பிப்ரவரி, 2021

ஏப்ரல் 4-வது வாரத்தில் தமிழக தேர்தல்: தலைமை ஆணையரிடம் அதிமுக வற்புறுத்தல்

2021 வருட தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா இன்று சென்னையில் ஆய்வு மேற் கொண்டார்.

இந்த குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

 


இன்றும், நாளையும் (பிப்.10,11) சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தனித்தனியாக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக  தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், வாக்குப்பதிவு இருக்குமிடத்தில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்றும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 15 வது சட்டப் பேரவை பதவிக்காலம்  வரும் மே மாதம் 24ம்  தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹ தலைமையிலான குழுவினர் சென்னை வந்திருந்த போது, 16வது  சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

 

தேர்தல் ஆணையக் குழு, இன்று மாலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். நாளை, தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிககள் தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ  முன்பு கூறியிருந்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-2021-assembly-election-chief-election-commissioner-chennai-visit-246777/