வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பஸ் ஸ்டிரைக்: அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் – சிஐடியு தலைவர் சௌந்தரராஜன்

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக நடத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுபெற்றவுடன் உடனடியாக அவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இன்று (பிப்ரவரி 25) முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக புதன்கிழமை அறிவித்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், பணிக்கு வராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பல மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் போக்குவரத்து இல்லாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திமுகவின் தொமுச, சிபிஐயின் சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் தினமும் லட்சக் கணக்கான மக்கள் அரசுப் பேருந்துகள் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது சென்னை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், பயணிகள் பலர் பேருந்து கிடைக்காமல் காத்திருந்தனர். பலர் பேருந்து இல்லாமல் சிரமத்துக்குள்ளானார்கள்.

அதே போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைவாகவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. காஞ்சிபுரம் பணிமனை தொமுச தலைவர் பூபதி கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு டிப்போவுக்கு 5 -6 பேருந்துகள்தான் ஓடுகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கங்களுடன் ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் பேருந்துகளை ஓட்டவில்லை. அதனால், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் பெரிய வெற்றிதான்” என்று கூறினார்.

அதே போல, திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 8 பணிமனைகளைச் சேர்ந்த 60 சதவீத தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் மொத்தம் 450 அரசுப் பேருந்துகளில் இன்று 40% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அரசுப் பேருந்துள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து ஊடகங்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், “தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரப்படுத்தபடும். தொழிற்சங்கங்களை அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/govt-bus-strike-will-continue-till-govt-calling-to-talk-transport-workers-unions-announced-249491/