புதன், 15 பிப்ரவரி, 2023

வருமான வரித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு – பிபிசி ட்வீட்

 

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறையினரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது. 

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.

இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் செல்போன்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிபிசி நியூஸ் பிரஸ் டீம் ட்விட்டரில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா


source https://news7tamil.live/full-cooperation-to-income-tax-department-bbc-tweet.html