வியாழன், 10 மார்ச், 2016

திமிங்கலத்தின் எச்சம்... பல லட்சம் !


பரந்து விரிந்த கடலில் எண்ணற்ற அதிசயங்களும் ஆச்சரியங்களும் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு துளியாக திமிங்கலத்தின் எச்சமான “அம்பர்” பல லட்சமாக மாறுகிறது.
பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பல வடிவங்களில் காணப்படும் இந்த அம்பரானது பஹாமாஸ் தீவு கடல் பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது.
‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுவதால் கிலோ பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது.
அம்பர் வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து.
ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும்.
இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர்.
பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும்.
அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். 5 கிராமிலிருந்து 50 கிலோவுக்கும் மேல் கிடைக்ககூடிய இதை அடையாளம் காண்பது சிரமம்.
கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுகிறார்கள். திமிங்கலத்துக்கு எச்சம்தான் ஆனால் வேண்டியவர்களுக்கு கிடைத்தால் லட்சம்.