புதன், 28 செப்டம்பர், 2016

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் இலவச வைஃபை சேவையால் கிராம

தமிழகத்திலேயே முதன்முறையாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் இலவச வைஃபை சேவையால் கிராம மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற் முன்னேற்றம் என பல்வேறு விஷயங்களுக்கு இணையதளம் என்பது அத்தியாவசியமாக மாறிவிட்ட நிலையில் மலையடிவாரப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராம ஊராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கிராமப்புற மாணவர்களின் கல்வி, தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் குருடம்பாளையம் கிராமத்தில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் பிரத்தியேக கோபுரம் அமைத்து இந்த இலவச வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் முப்பது பேர் அமர்ந்து இலவச இணையவசதியை பயன்படுத்திக்கொள்ள அரங்கமும் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தி உள்ளனர். வினாடிக்கு நான்கு எம்.பி அளவில் அப்லோட் மற்றும் டவுன்லோட் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் சுமார் நூறு கணிணிகள் வரை இதன் மூலம் இணைய வசதி பெற இயலும்.

இணைய வசதி பெற தனியார் பிரவுசிங் சென்டருக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி தற்பொழுது கிராம மக்கள் 200 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும் இந்த வைஃபை வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டம், அப்பகுதியினரிடையே இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற மகாத்மாவின் கருத்தை மெய்பிக்கும் வகையில் இது போன்ற முன்னோடி திட்டங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு படிக்கட்டுக்களாக அமையும் என்பதில் சந்தேகமில்லை