மெரினாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி தாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து மனித உரிமை ஆணைய நீதிபதி அடங்கிய குழு மெரினாவில் ஆய்வு நடத்த உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களின் எழுச்சியால் அவசரசட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
போராட்டம் நடத்திய மாணவர்கள் , இளைஞர்கள் மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி இருந்தனர். பின்னர் போலீசார் மற்றும் அரசு வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் கலைந்து சென்றனர்.
ஒரு சிலர் குழுக்கள் மட்டும் இளைஞர்கள் போர்வையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் தடியடி நடத்தினர். ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் கொளுத்தப்பட்டது.
போலீசாரின் தாக்குதல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. போலீசாரும் அதிக அளவில் காயம் அடைந்தனர். இந்நிலையில் கமிஷனர் ஜார்ஜின் செயல்பாட்டை சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் விமர்சித்திருந்தனர்.
கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரங்களை தமிழக மனித உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது. போராட்டம் நடந்த இடத்திலும் தடியடி நடந்த பகுதியிலும் மனித உரிமை ஆணைய நீதிபதி தலைமையிலான குழு பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளது.
பின்னர் இந்த குழு தடியடியால் பாதிக்கப்பட்ட மாட்டாங்குப்பம், நடுக்குப்பம் பகுதி , கொளுத்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் , தாக்கப்பட்ட காவலர்கள், போராட்டக்காரர்களிடம் விசாரணை நடத்தலாம்.
சமீபத்தில் பள்ளிக்கரணையில் போலீசார் போராடும் பெண்களை தாக்கியது குறித்து தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது , தமிழக மனித உரிமை ஆணையம் எனபது குறிப்பிடத்தக்கது.
மெரினா விவகாரத்தில் பலரும் விசாரணை கேட்டு வருகையில் மனித உரிமை ஆணையமே தானாக முன்வந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.