வியாழன், 21 டிசம்பர், 2017

இயற்கை முறையில் நாப்கின்களை தயாரித்து பள்ளி மாணவிகள் அசத்தல்! December 21, 2017

Image

உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் ரசாயன நாப்கின்களை தவிர்த்து, பாதுகாப்பான நாப்கின்களை வீட்டிலே எளிமையாக தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர் கோவையை சேர்ந்த பள்ளி மாணவிகள். 

பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளை தடுக்க  நவீன முறையில் சந்தைபடுத்தப்படும் ரசாயன நாப்கின்களை பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இந்த ராசாயன நாப்கின்கள் மண்ணில் மக்காத தன்மை உடையது மட்டுமின்றி தோல் பிரச்சனை, மலட்டுதன்மையை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்படுகிறது. எனவே சந்தையில் கிடைக்கும் நவீன ரசாயன நாப்கினை தவிர்த்து பாதுகாப்பான நாப்கின்களை வீட்டிலே தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளதாக, மாநில அளவில் நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் முதல் இடம் பிடித்து கோவை அரசு உதவி பெறும் பூ.சா.கோ கன்னியா குருகுல 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள்  
தெரிவித்துள்ளனர். 

அஜந்தா, கவுரி சுபா, நிரஞ்சனா, தனலட்சுமி, காவியா ஸ்ரீ ஆகி ஐந்து மாணவிகளை கொண்ட குழு இந்த முயற்சியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். 
இதில் வாழை நாரை தூளாக்கி, வேப்பிலை, வெந்தயம், பேப்பர் கூழ் ஆகியவற்றை 
கொதிக்க வைத்து, பின்னர் ஆர வைத்து ஈரக்கசிவை தடுக்கும் படலத்தை தயாரித்துள்ளனர். இது பயன்படுத்த எளிமையாக உள்ளதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பெற்றோர்களின் அனுமதியுடன் பள்ளி குழந்தைகளுக்கு பயன்படுத்த கொடுப்பதாகவும், இந்த நாப்கின் மாணவிகளுடம் மிகுந்த  வரவேற்பை பெற்றுள்ளதாகவும் பள்ளி ஆசிரியர் தெரிவித்தார். மேலும்  தயாரித்த நாப்கினை ஆய்வகத்தில் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் காற்று புகும் தன்மை சிறப்பாக உள்ளதாகவும், கிருமிகள் வளர்ச்சியும் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக கூறினார். எனவே இது உபயோகிக்க சிறந்து எனவும் ஆசிரியர் கூறி உள்ளார். 
 
மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ள இந்த கண்டுபிடிப்பு, வருகின்ற 26ம் தேதி 
அஹமதாபாதில் பிரதமர் முன்னிலையில் தேசிய அளவில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பெண்களே வீட்டில் நாப்கின்களை எளிமையாக தயாரிக்கும் முறையை மாணவிகள் கண்டுபிடித்துள்ளது, ரசாயன நாப்கின்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பலாம்.