வெள்ளி, 29 டிசம்பர், 2017

எதற்கும் அஞ்சாமல் எம்.எல்.ஏவை அறைந்த இளம்பெண் போலீஸ்! December 29, 2017


Image
தன்னை அறைந்த எம்.எல்.ஏவை தாமதிக்காமல் பதிலுக்கு பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் இமாச்சல்பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். கங்ரா, ஹமீர்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள் முதல் பகுதியாகவும், மாண்டி, சிம்லா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள் இரண்டாம் பகுதியாகவும் ராகுல்காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷாகுமாரி வந்திருந்தார். அப்போது கூட்டம் நடைபெறும் பகுதியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் குழுமி இருந்ததால் நெரிசல் நிலவியது. இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆஷாகுமாரியை ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆய்வுக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஷாகுமாரி, அங்கிருந்த இளம் பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்தார். சிறிதும் தாமதிக்காத அந்த இளம் பெண் காவலர் எம்.எல்.ஏவை பதிலுக்கு தாக்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.