வெள்ளி, 22 டிசம்பர், 2017

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்ம மரணம்! December 22, 2017

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள திருமலகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் முனிகண்ட கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்தினருடன், வாரங்கல் மாவட்டம் ராஜம்பேட்டையில் உள்ள கோழி பண்ணைக்கு சென்று, வேலை பார்த்து வந்தனர். 

பண்ணை அருகே ஒரு வீட்டில் தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் பால்ராஜ் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பால்ராஜின் மாமனார், மாமியார் வந்ததால் பிரியாணி சமைத்து சாப்பிட்டு விட்டு உறங்கியுள்ளனர். 

இன்று அதிகாலை பக்கத்து வீட்டார் வேலைக்கு பால்ராஜை அழைத்து செல்ல, பால்ராஜ் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வரவில்லை.   

இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது அனைவரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர். இரவு சமைத்து சாப்பிட்ட பிரியாணி உணவு விஷமானதா அல்லது கடன் தொல்லையால் பால்ராஜ் குடும்பத்தினருடன் விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்தவர்களின் விவரம்:

பால்ராஜ் (வயது 44)
பால்ராஜின் மனைவி திருமலா (வயது 39)
மகள் ஷிவானி (14)
மகன் சிண்டு (வயது 12)
மற்றொரு மகன் ஃபன்னி (வயது 8)
பால்ராஜின் மாமனார் பால நரசையா (65)
பால்ராஜின் மாமியார் பரதம்மா (வயது 60)