செவ்வாய், 19 டிசம்பர், 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! December 19, 2017

Image


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கோவையை சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. 

தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை எனக்கூறி கடந்த முறை தேர்தலை ரத்து செய்ததாகவும் மீண்டும் நிலைமை சீரான பின்பே தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதும் நிலைமை மாறவில்லை எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த முறை போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் தற்போதும் போட்டியிடுகிறார்கள் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கடந்த முறை 35வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மாநில காவல்துறை விசாரித்தால் முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது என்பதில் விசாலின் வேட்புமனுவை நிராகரத்ததில் ஏற்பட்ட குளறுபடியே உதாரணம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வரவுள்ளது.