புதன், 20 டிசம்பர், 2017

​மரணத்திற்கு பிறகும் ஜெயலலிதாவே பலிகடா - ஸ்டாலின் காட்டம்! December 20, 2017

Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மக்களிடம் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்ததாக தெரிவித்தார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதா அதிகாரிகளிடம் பேசியதாக தெரிவித்த போது அது தொடர்பான  வீடியோ, புகைப்படங்களை வெளியிட திமுக தலைவர் கருணாநிதி  அறிவுறுத்தியும், வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். தினகரன் அணியினர் 6 ஆயிரம் ரூபாய் பணம்  கொடுக்கும் போதே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று தெரிவித்த ஸ்டாலின், இந்த வீடியோ வெளிவந்ததன் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்றபோதே அவரது உடல் நிலையைப் பற்றி தமிழக மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, மருத்துவமனையிலேயே அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்பட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு தலைவர் கலைஞர் வலியுறுத்திய போதும், அம்மையார் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டபோதும் வெளியிடுவது குறித்து அக்கறை காட்டாதவர்கள், ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில், தங்கள் சொந்தக் கட்சிப் பிரச்சினையை சமாளிக்கவும் மக்களைத் திசைதிருப்பிடவும் சுயநலத்திற்காக உள்நோக்கத்துடன் வெளியிட்டு, மரணத்திற்குப் பிறகும் ஜெயலலிதாவை எப்போதும்போல் பலிகடா ஆக்கிட முன்வந்துள்ளனர். இந்த அளவுக்கு உடல் நிலைதேறிய அம்மையார் அவர்கள் திடீரென்று மர்மமான முறையில் மரணமடைந்தது எப்படி? என்ற கேள்வி எவருடைய மனதிலும் எழாமல் இருக்காது.

இதற்கு அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், இப்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்கள் மத்தியில் நிலவும் ஆழமான சந்தேகத்திற்குப் பதிலளிக்க வேண்டும்.