புதன், 20 டிசம்பர், 2017

நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுவராஜ் December 19, 2017

Image
கோகுல்ராஜ் கொலை வழக்கில், நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ், நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு  ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவாராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு தொடர்பாக நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் யுவராஜை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கின் தன்மை குறித்து தெளிவுபடுத்த, ஐந்து நிமிடம் கால அவகாசம் வேண்டும் என யுவராஜ் கோரிக்கை விடுத்தார். 

ஆனால் அனுமதி வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதனால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுவராஜ், இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை மறைத்தால், தாங்களும் சிறைக்கு செல்வீர்கள் என நீதிபதியை பார்த்து ஆவேசமாக பேசினார். 

இதையடுத்து கோபம் அடைந்த நீதிபதி, யுவராஜை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த யுவராஜ், வழக்கு ஆவணங்களை மறைக்க நீதிபதி தவறாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.