திங்கள், 25 டிசம்பர், 2017

முத்தலாக்குக்கு எதிராக சட்டம் இயற்றுவதை கைவிடுமாறு பிரதமருக்கு கோரிக்கை! December 25, 2017

முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் இயற்றும் முயற்சியை கைவிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. 

முத்தலாக் விவகாரம் தொடர்பாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர், மவுலானா ரபி ஹசானி நட்வி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அதன் செய்தித் தொடர்பாளர், மவுலானா கலில் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் இயற்றுவது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறியுள்ளார். 

இந்த சட்டம் நிறைவேறுமானால், பெண்கள் அதிக கஷ்டங்களைச் சந்திப்பார்கள், என தெரிவித்த கலில் உர் ரஹ்மான், விவாகரத்து செய்வதற்கான, ஆண்களின் உரிமையை பறிக்க முயல்வதை ஏற்க முடியாது, என குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும், என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.