சனி, 24 அக்டோபர், 2020

35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பில் தலைமை பதவி!

 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளுகைக் குழு தலைமைப் பதவியை  35 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா மீண்டும் பொறுப்பேற்றுள்ளது.

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் இந்தியா இடையே நூறு ஆண்டுகால ஆக்கப்பூர்வமான உறவில் ஒரு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திரு. அபூர்வா சந்த்ரா, 2020 அக்டோபர்-2021 ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளுகைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உயர்ந்த நிர்வாக அமைப்பான ஆளுகை குழுவானது கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள், நிதி ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இயக்குநர் ஜெனரலையும் தேர்வு செய்யும் அதிகாரம் படைத்ததாகும். இப்போது சர்வதேச தொழிலாளர் அமைப்பில் 187 உறுப்பினர்கள் உள்ளனர். வரவிருக்கும் 2020 நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளுகைக் குழுவின் கூட்டத்தை திரு.அபூர்வா சந்த்ரா தலைமையேற்று நடத்துவார். ஜெனிவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த சமூக பங்குதாரர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும். 


தொழிலாளர் சந்தையின் கடினத்தன்மையை அகற்றுவதற்கு பங்கேற்பாளர்களின் அரசால் எடுக்கப்படும் மாற்றங்களுக்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் தளமாகவும் இது இருக்கும். அமைப்புசாரா தொழில் அல்லது அமைப்புசார்ந்த தொழில் எந்த தொழிலில் பணியாற்றினாலும் அனைத்துப் ஊழியர்களுக்கும் சர்வதேச அளவிலான சமூக பாதுகாப்பு அளிப்பது குறித்த தெளிவான நோக்கத்தை இந்த கூட்டம் உருவாக்கும்.