புதன், 21 அக்டோபர், 2020

வங்கக்கடல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள தகவலில், சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை,  ஈரோடு, கோயம்புத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசவுள்ளதால் இப்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.