புதன், 28 அக்டோபர், 2020

முகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்

 இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாக கருதப்படும் சவுதி அரேபியா, முகமது நபியை இழிவுபடுத்தும் கேலிச்சித்திர படங்களையும், இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளையும் எச்சரித்தது.

இருப்பினும், நபியின் கேலிச்சித்திர படங்களை பிரான்சில்  வெளியிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரும்  இதர இஸ்லாம் நாடுகளின் கோரிக்கைக்கும் சவுதி அரேபியா செவிசாய்க்க வில்லை.

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், வளைகுடா அரசு அனைத்து வகையான பயங்கரவாத செயல்களையும் கண்டிக்கிறது.  இந்த மாதம் பாரிஸில் நபிகள் தொடர்பான படங்களை தனது வகுப்பில் பயன்படுத்திய ஆசிரியரை பயங்கரவாதி ஒருவர் தலையை துண்டித்தார். எனவே, அதிகாரியின் கருத்து இந்த சம்பவத்தின் வெளிப்பாடாக அமைந்தது.

“கருத்து சுதந்திரமும், கலாச்சாரமும் மனிதர்களுக்கு இடையேயான ஒற்றுமை, மன்னித்தல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்கான கலங்கரை விளக்கமாக திகழ  வேண்டும். இது வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றை உருவாக்கும் நடைமுறைகளை முற்றிலும் நிராகரிக்கிறது ” என்று கூறப்பட்டது.

நபியின் கேலிச்சித்திர படங்கள் இஸ்லாம் உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துருக்கி அதிபார் ரிசப் தயிப் எர்துவான் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வெளிப்டையாகவே அறிவித்தார்.  பாகிஸ்தான் நாடாளுமன்றம் பாரிஸிலிருந்து தனது தூதரை திரும்ப பெறுவதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

சவுதி அரேபியாவில், பிரெஞ்சு சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடரான கேரிஃபோர் நிறுவனம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற பரவலான கருத்து  சமூக ஊடகங்களில் பரவலாகி வந்தது. இருப்பினும், திங்களன்று ரியாத் நகரில் அமைந்துள்ள இரண்டு முக்கிய கடைகள் வழக்கம் போல்  இயங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதுவரை எந்த தாக்கத்தையும் உணரவில்லை என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

மத்திய கிழக்கு முழுவதும் கேரிஃபோர் சங்கிலித் தொடர் கடைகளை நடத்திவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த Majid Al Futtaim எனும் நிறுவனம்,”உள்ளூர் நிறுவனங்களிடம் பெரும்பான்மையான பொருட்கள்  கொள்முதல் செய்தால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதன் மூலம் பிராந்திய வளர்ச்சி அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நுகர்வோரின் எண்ண ஓட்டங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என்று திங்களன்று ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.