புதன், 21 அக்டோபர், 2020

கமல்நாத் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானது – ராகுல் காந்தி

 மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பாஜக பெண் தலைவர் ஒருவரை ‘ ஐட்டம் ( item)’ என்று கூறியது “துரதிர்ஷ்டவசமானது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய இத்தகைய  மொழியை  தான் பாராட்டவில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய காந்தி, “கமல் நாத் ஜி எனது கட்சியைச் சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில், அவர் பயன்படுத்திய மொழி எனக்குப் பிடிக்கவில்லை… நான் இத்தகைய போக்கை ஆதரிக்கவில்லை .…  இது மிகவும்  துரதிர்ஷ்டவசமானது.” என்று தெரிவித்தார்.

“அனைத்து மட்டத்திலும், பெண்கள் மீதான எங்கள் அணுமுறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் … சட்டம் ஒழுங்கு, சமூக அந்தஸ்த்து,  தொழில்முறை வாழ்க்கை  என பல்வேறு மட்டத்திலும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். நமது பெண்கள் தாம் நமது பெருமை. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ”என்றும் அவர் கூறினார்.

காந்தியின் கூற்றுக்கு பதிலளித்த கமல்நாத், “இது ராகுல் காந்தியின் கருத்து. எனது வார்த்தைகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை  நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். யாரையும் அவமதிக்க எண்ணாதபோது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?  ”என்று முன்னாள் மத்திய பிரேதேச முதல்வர் கமல்நாத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதியன்று நடைபெற உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை  தப்ராவில் நடந்த  பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்நாத், ” வேட்பாளர் சுரேஷ் ராஜாவு ஒரு எளிமையான மனிதர். எதிர்க்கட்சி வேட்பாளர் (இமார்டி தேவி) ஒரு ஐட்டம்( item) . அவரின் (எதிர்க் கட்சி வேட்பாளர்) பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும்? நீங்கள் என்னை விட அந்த நபரை நன்கு அறிவீர்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய கமல்நாத், “தான் பயன்படுத்திய வார்த்தைக்கு பல விளக்கங்கள் இருப்பதாகவும், இடைத்தேர்தலை மனதில் வைத்து சிவராஜ் சிங் செளகான் பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.