செவ்வாய், 27 அக்டோபர், 2020

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில், அவர்கள் இருவரும் காவல்நிலையத்தில், ரத்தம் சொட்ட சொட்ட, மிருகத்தனமாக கடுமையாகத் தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளனர், என சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள், தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர். இதுகுறித்து உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது. 

முதலில் சிபிசிஐடி விசாரித்த நிலையில், அதன் பின் தமிழக அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றது. இதில் முதற்கட்ட தகவல் அறிக்கையில் தந்தை, மகன் இருவரும் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டுகள் முருகன், முத்துராஜா, சிறப்புக் காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் துரை, வெயில்முத்து மற்றும் தாமஸ் பிரான்சிஸ், ஆகிய 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைடுத்து 10 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தபின் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் தந்தை மகன் இருவருமே, காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன், இருவரது உடலில் இருந்தும் ரத்தம் சொட்ட, சொட்ட, போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரது ஆடைகளையும் அகற்றிவிட்டு, 3 போலீசார் அவர்களை பிடித்துக்கொள்ள, ஆய்வாளர் ஸ்ரீதர், ஏட்டு முத்துராஜா ஆகியோர் கடுமையாக தாக்கி உள்ளதாக, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் ஒரு மேஜை மீது படுக்கவைத்து, அவர்களின் பின்புறத்தில், லத்தி, கம்பு போன்றவற்றால் மிருகத்தனமாக கடுமையாக தாக்கியுள்ளனர் என்றும், இதில் இருவருக்கும் ரத்தம் கடுமையாக வெளியேறியுள்ளது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தந்தை - மகன் இருவருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு முறையாக சிகிச்சை அளிக்காமலேயே, கிளைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், சிபிஐ-யின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை மறைத்து போலீசார் மருத்துவச் சான்றிதழ் பெற்று, கோவில்பட்டி சிறையில் அடைத்ததாகவும், இதனாலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர், என்றும் அந்த குற்றப்பத்திரிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல்கள் அனைத்தும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த, பெண் காவலர்கள் பியூலா மற்றும் ரேவதியின் வாக்குமூலத்தை வைத்து, சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.