ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடியால் மாணவர்கள் குழப்பம்!

 நாடு முழுவதும் நேற்று வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு  நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் ஒப்பிடும்போது பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இதில் திரிபுரா மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 536 என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 889 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று  உத்தரகாண்டில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 47 பேர் தேர்வு எழுதிய நிலையில், 37 ஆயிரத்து 301பேர் தேர்ச்சி பெற்றதாகவும்,   தெலங்கானா மாநிலத்தில் 50 ஆயிரத்து 392 பேர் தேர்வு எழுதிய நிலையில், ஆயிரத்து 738 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் தேர்ச்சி விகிதம்  49.15% எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  

உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7 ஆயிரத்து 323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் தேர்ச்சி விகிதம் 60.79% எனவும் தவறான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின்  எண்ணிக்கையாக செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு முடிந்தவுடன் 14.37 லட்சம் மாணவர்கள் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 13.66 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியதாக குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது.  ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் விடுபட்டதாக உள்ள குளறுபடியால் மாணவர்களின் மதிப்பெண்களிலும் குளறுபடிகள் ஏற்பட்டு இருக்குமோ என மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் nta.ac.in இணையதளத்தில் இருந்து நீட் தேர்வு முடிவுகளை  தேசிய தேர்வு முகமை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.