வெள்ளி, 23 அக்டோபர், 2020

6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்

 மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வங்கக்கடலில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற்றமடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.