வியாழன், 8 அக்டோபர், 2020

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

 கட்டாய முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.  

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன என நீதிபதிகள் வினாவினர்.

அதே சமயம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது விதக்கப்படும் அபராத தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தினால் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். தொற்று ஏற்பட்டால் தன் குடும்பத்தினர் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து, பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க, வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.