நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
மக்களவை சபாநாநகர் ஓம் பிர்லா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 19-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும்.
மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் காலை 11 மணி அளவில் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து உறுப்பினர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம்.
அவை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் 311 மக்களவை உறுப்பினர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
சில உறுப்பினர்கள் கொரோனா அறிகுறி இருந்ததாலும், மருத்துவ காரணங்களாலும் தடுப்பூசி இன்னும் செலுத்தி கொள்ளவில்லை. அதே போல் நாடாளுமன்ற ஊழியர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வருகிற 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.
source https://news7tamil.live/parliament-session-begins-next-monday-covid-test-not-mandatory-om-birla.html