வியாழன், 30 டிசம்பர், 2021

டூவிலர்களுக்கு பெட்ரோல் விலையில் ரூ.25 குறைப்பு – ஜார்கண்ட் முதல்வரின் புதுமையான முயற்சி

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ள நிலையில், 2022இல் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 25 குறைப்பதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

இந்தத் தள்ளுபடித் தொகையானது Cashback ஆஃபர் மாதிரி மக்களின் வங்கிக் கணக்கிற்கோ அல்லது நேரடியாகவோ போய்ச் சேரவுள்ளது. ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு 10 லிட்டர் வரம்பு என்ற கணக்கில், 25 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜார்கண்ட்டில் தற்போது பெட்ரோல் 98.52 ரூபாய்க்கும், டீசல் 91.56 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில், “பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து ஏழை மக்களைப் பாதிக்கிறது என்பதை அறிவோம். ஏழை மக்கள் வீடுகளில், இருசக்கர வாகனம் இருந்தும், பெட்ரோல் போட முடியாததால் அதனை பயன்படுத்தவில்லை. பயிரை மார்கெட்டில் விற்ககூட செல்ல முடியாத நிலை உள்ளது. சிலர் பைக் ஓட்டுவதற்காக மண்ணெண்ணெய், பெட்ரோலைக் கலந்து பயன்படுத்துவதாக கேள்விப்பட்டோம். அதன் காரணமாகவே, பெட்ரோல் விலையை ரூபாய் 25 குறைத்துள்ளோம்” என்றார்.

பின்னர், ஒரு மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினர் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 லிட்டர் என்ற வரம்புடன் பெட்ரோல் மானியத்தைப் பெறுவார்கள். மாநில அரசு “பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளுக்கு மாற்றலாம்” என்றார்.

இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை குறைப்பது என்ற புதுமையான முயற்சியை கையாண்ட முதல் மாநிலம் ஜார்கண்ட் தான். முன்னதாக, 23 மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைத்துள்ளனர். அதில் கர்நாடகாவில் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு 13.35 ரூபாய் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மிசோரம், புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு 12 ரூபாய் குறைக்கப்பட்டது.

மாநில நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பெட்ரோல் மீதான வாட் வரியை அனைவருக்கும் குறைக்க அரசாங்கம் விரும்பவில்லை. ஏழைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் மானியம் வழங்க திட்டமிடப்பட்டது.

ஜார்கண்டில் 61 லட்சம் குடும்பங்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். அதில், பலரிடம் மோட்டார் சைக்கிள்கள் இருக்கும். அதன் எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட வேண்டும். மானியத்தை வழங்குவதற்கான ஒரு வழி, பெட்ரோல் நிலையங்களில் ஆதார் அடிப்படையிலான அடையாளத்துடன், மானியத்தை அங்கேயே வழங்குவதாகும். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

கடந்த மாதம், பெட்ரோலுக்கு லிட்டர் 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி குறைப்பை மத்திய அரசு அறிவித்தது. இது, சில மாநிலங்கள் சொந்த வரியை குறைத்து விலையை குறைக்க தூண்டியதாக அமைந்தது.

மேலும், சோரன் தனது அரசாங்கம் பெண்கள் அதிகாரத்திற்கு எதிரானது என்று பாஜக கூறுவதாக குற்றச்சாட்டினார். 50 லட்சம் வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளின் பதிவுக் கட்டணத்தை பெண்களின் உரிமையாளர்களுக்கு 1 ரூபாயாக நிர்ணயிக்கும் திட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையின் அடிப்படையில் பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

ஆனால், நாங்கள் அந்த திட்டத்தை நிறுத்தியதற்கான காரணம், அதனால் பலனடைவது பணக்காரர்கள் மட்டுமே. ஏழைகளுக்கு கிடையாது. இந்தப் பணத்தை சேமித்து, வயதான பெண்கள், விதவைகள் மற்றும் பிற பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கினோம். ஜார்க்கண்டில் எப்படியும் ரூ.50 லட்சத்தில் பிளாட் வாங்கக்கூடிய பெண்கள் யார்? ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு யாரும் பிளாட் வாங்க்பபோவது இல்லை. அவர்களுக்கு 1 ரூபாய் திட்டத்தினால் என்ன பலனடைவார்கள் என கேள்வி எழுப்பினார்.

source https://tamil.indianexpress.com/india/25-per-litre-relief-in-price-of-fuel-for-two-wheelers-of-the-poor-390209/