சனி, 25 டிசம்பர், 2021

வேகமெடுக்கும் ஒமிக்ரான்… இந்தியாவில் பாதிப்பு

 25 12 2021 உலக நாடுகளில் அதிவேகமாக பரவும் ஒமிக்ரான் தொற்று, இந்தியாவிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் தான் ஒமிக்ரான் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதுவரை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும், தெலங்கானாவில் 38 பேரும், கேரளாவில் 37 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில், தொற்று பாதிப்பால் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை தனது அறிக்கையில், உலகம் நான்காவது கொரோனா அலையை சந்தித்து வருகிறது. மக்கள் பாதுகாப்பை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் தாக்கம் வீடுகளுக்குள் அதிகளவில் இருக்கலாம்.

ஆய்வின்படி, ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளாகும் 10 பேரில் 9 பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே, தடுப்பூசி மட்டுமின்றி மாஸ்க் அணிவது, கண்காணிப்பு அதிகப்படுத்துவது தான் ஒமிக்ரானை சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வழியாகும்.

ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடடிக்கையாக உத்தரப் பிரதேசம், ஹரியானாவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.

இரு மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாக தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/india-omicron-tally-rises-to-415-country-record-7189-new-covid-19-cases-387885/