சனி, 18 டிசம்பர், 2021

தமிழக மாநில பாடலாக தமிழ்தாய் வாழ்த்து : அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

 17 12 2021 

Tamilnadu News Update : தமிழ்தாய் வாழ்த்து தமிழகத்தின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சி உட்பட எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழதாய் வாழ்த்து பாடுவது வழக்கம். ஆனால் சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் 20-ந் தேதி நடைபெற்ற 58-வர் பட்டமளிப்பு விழாவில், தமிழ்தாய் வாழத்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டத்தை தெரிவித்தனர்.   

மேலும் தமிழ்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல் தான் தேசிய கீதம் அல்ல என்றும், தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது அணைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டப்படியான விதிமுறை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி கூறியிருந்தார். இதனால் தமிழ்தாய் வாழ்த்து பாடல் குறித்து சமூக வலைதளங்களில் அதிக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சிகள் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மேலும் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் மாற்றுத்தினாளிகளுக்கு எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்தாய் வாழ்த்து 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்தாய் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பல்கலைகழகங்கள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுஅமைப்பு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்பாட்டாக பாடப்பட வேண்டும்.

தனியார் அமைப்புகள் நடத்தும் கலை இலக்கிய மற்றும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஊக்குவிக்க வேண்டும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-order-for-tamilthai-greeting-on-tamilnadu-state-song-384618/