வியாழன், 30 டிசம்பர், 2021

மழைவெள்ள பாதிப்பு; நிவாரணமாக ரூ.6,230.45 கோடி வழங்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 29 12 2021 TN urges Centre to release over Rs 6,230.45 crore assistance: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளுக்கு ரூ.6,230.45 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலத்தின் நிதி நிலைமையை மேலும் சுமைப்படுத்திய கனமழை, வெள்ளம், உயிர் சேதம், பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் ஆகியவற்றிற்காக தமிழகத்திற்கு ரூ.6,230.45 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்-டிசம்பர்) தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால், பெரு வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் நிதி நிலை “கொரோனா தொற்றுநோயால் கடுமையான நிதிச்சுமையில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளச் சூழல் அதைத் தீவிரப்படுத்தியது,” என்று முதல்வர் கூறினார்.

மேலும், “மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர் இழப்பு, பயிர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதம்” ஆகியவை குறித்து பிரதமரின் கவனத்தை முதல்வர் ஈர்த்தார்.

மாநில அரசு விரைவான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதால், குறுகிய காலத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இடைவிடாத மழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழு நவம்பர் 21, 2021 அன்று தமிழகம் வந்தது.

“மத்திய அரசாங்கத்திடம் இருந்து நிவாரண உதவி கோரி நாங்கள் இதுவரை மூன்று குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளோம், அதில் தற்காலிக மறுசீரமைப்புக்காக 1,510.83 கோடி ரூபாயும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளான சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் போன்றவற்றை நிரந்தரமாக மீட்டெடுப்பதற்காக 4,719.62 கோடி ரூபாயும்.” கேட்டுள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

நவம்பர் 16, 25 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்கு குறிப்பாணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநில பேரிடர் மீட்பு நிதியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் வெள்ளத்தின் தற்போதைய பாதிப்பில் இருந்து விடுபடவும், சேதமடைந்த உள்கட்டமைப்பை புனரமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் பாதையில் கொண்டு வரவும் முடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.” என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவியை விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/rain-damage-tn-urges-centre-to-release-over-rs-6000-crore-assistance-390062/