சனி, 27 பிப்ரவரி, 2016

பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......!

மரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......!
*****************************************************
அன்பிற்கினிய சகோதரி தமிழச்சி அவர்களுக்கு....
எல்லாவற்றிற்கும் முதலாவதாக எழுத்துக்கள் வழி உங்கள் உள்ளத்தை காயப்படுத்தி விட்ட எங்கள் சக முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
நிச்சயமாக உங்களை காயப்படுத்தும் எண்ணத்தில் அவர்கள் அதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதனை எங்களால் உறுதியாக கூற இயலும்.
மாறாக தங்களது பதிவில் எங்கள் தலைவர் நபிகளார் மற்றும் அவர்கள் தம் துணைவியர் குறித்த தங்களது கடின சொல்லாடல்களின் எதிர்வினையாகத்தான் இது நிகழ்ந்திருக்கும் என நம்புகிறோம்.
இருப்பினும் இதை நாம் நியாயப் படுத்தவில்லை. எனவேதான் வேதனைகளிலாழ்ந்துள்ள தங்கள் உள்ளத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும் - சாந்தியும் சமாதானமும் நின்று நிலவட்டுமாக" என மொழிந்தவர்களாக தொடர்கிறோம்.
தாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆக்கப்பூர்வமாக அறிவுபூர்வமாக சிந்திப்பவராக உங்களது பல பதிவுகளை கண்ணுற்றுள்ளோம்.
நாம் அவற்றுள் பலவற்றை SHARE செய்தும் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் கடந்த சில தினங்களாக இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களின் நிலை குறித்தும், எங்கள் உயிரினும் மேலான தலைவர் நபிகள் நாயகம் அவர்களைப் பற்றியும் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றீர்கள்.
எங்கள் தலைவரின் மீதும் எங்களது மார்க்கத்தின் மீதும் ஏறத்தாழ 1470 வருடங்களாக விமர்சனங்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
அவற்றை அழகிய முறையில் எதிர்கொண்டு, அறிவியல் ரீதியாகவும் தெளிந்த உறுதியான ஆதாரங்களின் அடிப்படையிலும் -
"இஸ்லாம் மனித குலத்தின் உன்னத வாழ்வியல்" -
என்பதனை நிரூபணம் செய்து, அது பெரு வளர்ச்சி பெற்றுக் கொண்டுதான் உள்ளது என்பதனை உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நீங்களே அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறோம்.
இந்நிலையில் தற்பொழுது இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் தங்களது ஏற்பட்டுள்ள சந்தேக வினாக்களுக்கு உங்கள் பகுத்தறிவு சிந்தனை ஏற்றுக் கொள்ளத் தக்கதான விடைகள் தர வேண்டியது முஸ்லிம்களின் கடமையாக இருக்கின்றது.
ஆனால் இந்த கடின பணியை அனைத்து முஸ்லிம்களாலும் செய்திட இயலாது.
எனவே இன்றைய கால கட்டத்தில் அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் மார்க்கத்தை - அதன் சட்ட திட்டங்களை தமது தொடர் ஆய்வுகளின் மூலம் பெருமளவு அறிந்துள்ள மார்க்க அறிஞர் என நாங்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள-
மரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை நேரில் சந்தித்து-
தங்களது உள்ளத்தின் அனைத்து சந்தேகங்களையும் விவரித்து குழப்ப மனநிலையில் உள்ள தாங்கள் மகிழ்ச்சியான தெளிவுகள் பெற வேண்டுமென அன்போடு அழைப்பு விடுக்கின்றோம்.
நீங்கள் கல்வி கேள்வியில் மிகைத்தவர். சிறந்த முடிவெடுப்பீர்கள் என நம்புகிறோம்.
அன்புடன்
முகநூல் முஸ்லிம் அரசியல் மீடியா.
26/02/2016