திங்கள், 29 பிப்ரவரி, 2016

அரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்


முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிschool_booksலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
”மாணவர்களுக்கு தேவையான முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணையவழி மூலமாக (www.textbookcorp.in) விற்று வருகிறது. மேலும், இணையவழியாக பணம் செலுத்த இயலாததால், பாடநூல்களை பெற முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தாலுகா அளவிலான அரசு பொது இ-சேவை மையம் மூலமாகவும் பணம் செலுத்தி பாடநூல்கள் பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவற்றை அரசு பொது இ-சேவை மையத்திலேயே, பாடநூல் நிறுவன இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தை அணுகி தேவையான பாடநூல்களை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி, பதிவு செய்யலாம். அதற்கான ரசீதும் வழங்கப்படும்.
இதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. அவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, பாடநூல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.