ஞாயிறு, 28 மே, 2017

கேளம்பாக்கம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



திருப்போரூர், 
கேளம்பாக்கம் அருகே வெடிகுண்டுகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் கைது
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்தி சென்றதில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 2 பேர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்களும், டிபன் பாக்ஸ் ஒன்றில் 3 நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

விசாரணையில் அவர்கள் ஓட்டேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெடுங்குன்றத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற பார்த்திபன் (வயது 23), ஊரப்பாக்கத்தை சேர்ந்த தீபக்ராஜ் (23) என்பது தெரியவந்தது.
இருவர் மீதும் கொலை வழக்குகள் இருப்பதும் சில நாட்களுக்கு முன்னர்தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

பார்த்திபனை யாரேனும் கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தில் இங்கு தலைமறைவாக இருப்பதும், தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் இந்த பகுதியில் உள்ள யாரையாவது கொலை செய்யும் எண்ணத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியுள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

http://www.dailythanthi.com/News/Districts/2017/05/28003144/With-explosives-Standing-there-2-people-arrested.vpf