திங்கள், 24 ஜூலை, 2017

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? - முதலில் இதைப் படியுங்கள்..!! July 23, 2017

பரபரப்பாகிப் போன வாழ்க்கை சூழலில் காலதாமதமாக எழுந்துகொள்ளுதல், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லுவதில் அவசரம் காரணமாக காலை சிற்றுண்டி உண்ணுவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். சிலர் இதனை பழக்கமாகவே மாற்றிக்கொண்டு விட்டிருக்கின்றனர். சிலர் இதனை பெருமையாகவும் கூறிக்கொள்வது உண்டு. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாக ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சென் என்ற 45வயது பெண்மணிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது, பின்னர் அது தொடர்ந்தும் வந்துள்ளது. 

மருத்துவ பரிசோதனையில் கற்கள் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது, எனினும் அறுவை சிகிச்சை மீது ஏற்பட்ட அச்சம் காரணமாக அவர் மருத்துவம் பார்க்காமலே தவிர்த்து வந்துள்ளார்.

சமீபத்தில் அவருடைய வயிற்று வலி தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்ததனால் வேறு வழியின்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்பெண்மணி. அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனையில் அதிர்ச்சி:

பரிசோதனையின் முடிவில் அப்பெண்மணியின் பித்தப்பை, கல்லீரல் மற்றும் பித்தக் குழாய்கள் போன்ற பகுதிகளில் எண்ணற்ற கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே அவருடைய வலிக்கு காரணமாகும்.

முட்டை அளவில் கற்கள்:

சென் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் முடிவில் சிறியதும், பெரியதுமாக 200க்கும் மேற்பட்ட கற்கள் அவரின் உடலில் இருந்து அகற்றப்பட்டது. இதில் சில கற்கள் முட்டை போன்று பெரிதாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. 



கற்கள் உருவான காரணம்:

சென்னுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இது தொடர்பாக கூறும்போது, இப்பெண்மணி காலை உணவை கடந்த 8 ஆண்டுகளாக தவிர்த்து வந்துள்ளார். அதன் காரணமாகவே இவரின் உடலில் கற்கள் உருவாகியுள்ளது. இவை ஆண்டுகள் கணக்கில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், மிகப்பெரிய அளவிலும் உருவாகியுள்ளன என்றார்.

மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை:

காலை உணவை தவிர்ப்பவர்களின் பித்தப்பை சுருங்கி விரிவடையும் தன்மையை நிறுத்திவிடும், இது கற்கள் உருவாக வழிவகுக்கிறது. எனவே காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்பதே மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது.