
மின் ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக 15ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் திட்டமிட்டபடி 16ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின் ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்டவை அளிக்கப்படாததால், சுமார் 88,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து நேற்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் இடையே அதிகாரிகள் திடீரென வெளியேறியதாக அதில் கலந்துகொண்ட மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின் ஊழியர் சங்கத்தினர், 15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அதிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால் திட்டமிட்டபடி 16ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.