
காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கபடுகிறது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நடுவர் நீதிமன்றம் தீர்ப்பைத் தாண்டி மேலும் 72 டிஎம்சி நீரை பெற்று தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் 192 டிஎம்சி நீரை அளிக்க முடியாது என கர்நாடகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 9ம் தேதியன்று காவிரி வழக்கின் தீர்ப்பை 4 வாரத்தில் வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது.