ஞாயிறு, 9 ஜனவரி, 2022

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1000; தமிழக அரசு அரசாணை வெளியீடு

 8 1 2022 ஒரு யூனிட் ஆற்று மணலின் அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தேவைப்படுவோர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆற்று மணலைப் பெறலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆற்றுப் படுக்கைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான இந்த புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், ஆற்று மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யபடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு ஆற்று மணலின் அடிப்படை விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆற்றுமணலை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதிலே தொகையும் செலுத்தி மணலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.

தற்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளின் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம். இவ்வசதியை தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முறைகேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் ஆற்று மணல் விற்பனை கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-fixed-rate-for-river-sand-rs-1000-per-unit-394348/