சனி, 15 ஆகஸ்ட், 2015

பெங்களூரு முஸ்லிம் பகுதியில் போலி கணக்கெடுப்பு...


பாஜகவை சேர்ந்த 5 பெண்கள் கைது....!!
பெங்களூருவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கணக்கெடுப்பு அதிகாரிகள் போன்று நடித்து அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் செல்ல முயன்ற பாஜக மகளிர் பிரிவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணக்கெடுப்பு அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பாஜகவின் மகளிர் பிரிவைச் சேர்ந்த ஐந்து பெண்கள் கடந்த புதன் கிழமை (12.08.2015) மாலை வேளையில் முஸ்லிம் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக குறிவைத்துச் சென்று அவர்களுடைய வாக்காளர் அட்டைகளைச் சோதனை செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் உங்களுடைய வாக்காளர் அட்டைகள் இனிமேல் செல்லாது எனக்கூறி அவற்றைப் பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
தற்போது எந்த ஒரு கணக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பெண்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்து கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லிக் கேட்ட போது, அவர்கள் போலிகள் என்பது தெரிய வந்துள்ளது.
அப்போது அப்பெண்கள் தாங்கள் பாஜகவின் மகளிர் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் போலியான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் இதுப்போன்ற திருட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாஜகவினர் மீதும் சங்கப்பரிவார அமைப்புகள் மீதும் நீண்ட நாளாக குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில், கணக்கெடுப்பு அதிகாரிகளைப் போன்று போலி வேடமிட்ட பாஜகவின் மகளிர் பிரிவினர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தியுள்ளது.
தகவல் : இந்நேரம்