ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மஞ்சள்காமாலைக்கு ஓர் உளவாளி!


எனக்கு (பாதிக்கப்பட்ட நோயாளி) மஞ்சள்காமாலை உள்ளதோ எனச் சந்தேகம் ஏற்பட்டது.
காய்ச்சல், வயிற்று வலி, மஞ்சள் நிறமாக சிறுநீர் வெளியேறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. ரத்தப் பரிசோதனையில் மஞ்சள்காமாலை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து எனது பாட்டியும் பக்கத்து வீட்டுப் பெரியவர்களும் கூறியதால், பச்சிலை தேய்த்துக் குளித்தேன். கஷாயமும் குடித்தேன். மஞ்சள்காமாலை குறையவில்லை. கையில் சூடு போட்டு கண்ணில் கஷாயம் ஊற்றிக் கொண்டால் மஞ்சள்காமாலை மாயமாகி விடும் என்றார்கள். நான் ஏற்கவில்லை. உடனடியாக இரைப்பை-குடல் மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெறச் சென்றேன்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்பட சிறப்பு ரத்தப் பரிசோதனைகளைச் செய்து கொண்டேன். ரத்தம் தொடர்புடைய கல்லீரல் பாதிப்பு மஞ்சள்காமாலை இல்லை என்றும் பித்தக்குழாய் அடைப்புக் காமாலை ("அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டிஸ்') என்றும் மருத்துவ நிபுணர் உறுதிப்படுத்தினார். சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள் என்று என்னை (பாதிக்கப்பட்ட நோயாளி) அந்த மருத்துவ நிபுணர் மிகவும் கடிந்து கொண்டார். என் அறியாமையை உணர்ந்து வருத்தப்பட்டேன்.
பித்தக்குழாய் அடைப்புக்குக் காரணத்தை மருத்துவ நிபுணர் ஆய்வு செய்யத் தொடங்கினார். கல் அல்லது புற்று நோய் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் மருத்துவ நிபுணர். அப்போதுதான் உரிய சிகிச்சையை அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் துறைக்கு உரிய சிறப்பு வல்லுநரிடம் அனுப்பி வைத்தார்.
பித்தக்குழாய் அடைப்பைக் கண்டறிய ஓர் உளவாளி ("ஸ்பைகிளாஸ் எண்டோஸ்கோப்பி') கருவி பரிசோதனை உள்ளதை அந்த வல்லுநர் தெரிவித்ததுடன் எனக்கு நம்பிக்கை பிறந்தது.
"ஸ்பைகிளாஸ் எண்டோஸ்கோப்பி' பரிசோதனையைச் செய்து கொள்ள சம்மதித்தேன். புற்று நோய் இருக்குமோ என்ற பயமும் எனக்கு (பாதிக்கப்பட்ட நோயாளி) இருந்தது. ஆனால் வாய் மூலம் சிறப்பு "ஸ்பைகிளாஸ் எண்டோஸ்கோப்பி' கருவியை குடல் வழியாக பித்தக் குழாய் வரை செலுத்தி பரிசோதனை ஆரம்பித்தது. பித்தக் கல்லினால்தான் அடைப்பு ஏற்பட்டு, மஞ்சள்காமாலை உருவாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
உடனடியாக அறுவைச் சிகிச்சையின்றி அதே "ஸ்பைகிளாஸ் எண்டோஸ்கோப்பி' கருவி மூலம் லேசர் கதிர்களைச் செலுத்தி அந்தக் கல்லை நொறுக்கி, கல்லின் தூள்கள் அனைத்தும் உறிஞ்சி வெளியே எடுக்கப்பட்டன. மஞ்சள்காமாலை சரியானது.
பல திருப்பங்கள் நிறைந்த எனது இந்த மருத்துவக் கதையில், என் அனுபவம் மூலம் சொல்கிறேன். மஞ்சள்காமாலை ஏற்பட்டவுடன், அது எதனால் ஏற்பட்டது என்பதை முழுமையாக மருத்துவ அறிவியல் ரீதியாகத் தெரிந்து கொள்ளாமல் சுய மருத்துவம் செய்து கொள்வது உயிருக்கு ஆபத்தாக முடியும். அடைப்புக் காமாலை ஏற்பட்டுள்ளதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க "ஸ்பைகிளாஸ் எண்டோஸ்கோப்பி கருவி' உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் உள்ளதைத் தெரிந்து கொண்டேன். இதை அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
-மெடிந்தியா ஜீரண நலத்துறை மருத்துவமனை